அறிவிப்பு

காந்தி -இன்று தளத்தில் காந்தி,காந்தியர்கள் ,காந்திய செயல்பாடு - பற்றிய கட்டுரைகள் ,நினைவுக் குறிப்புகள், மொழிபெயர்ப்புகள், ஓவியங்கள் போன்ற படைப்புகளை நண்பர்கள் பகிர்ந்து கொள்ளலாம்..ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்- forgandhitoday@gmail.com

Thursday, May 16, 2013

சமயசார்பின்மையும் காந்திய பங்களிப்பும்

திரு கார்த்திக் அவர்கள் இந்த தளத்தில் மொழிபெயர்த்துப் பதிப்பித்து  வரும் மிலி போலாக்கின் "காந்தி எனும் மனிதர்" என்ற நூலின் தமிழாக்கத் தொடரை வாசித்து வருகிறேன். தெளிவான, இயல்பான மொழிபெயர்ப்பு. இதில் நாம் காந்தியின் பொது வாழ்வின் தென்னாப்பிரிக்க துவக்க நாட்களை நெருக்கமாக அறிந்து கொள்ள முடிகிறது. காந்தி விஷயத்தில் பொது வாழ்வும் தனி வாழ்வும் ஒன்றுதான் என்பதால் காந்தி என்ற மனிதர் அந்த ஆரம்ப நாட்களிலும் சரி, அவரது இறுதி நாட்களிலும் சரி ஒரே மாதிரிதான் இருந்திருக்கிறார் என்பது தெரிகிறது. குறிப்பாக, உலகில் உள்ள அனைத்து விஷயங்களையும் விவாதிப்பதிலும், தான் சரி என்று நினைப்பதை தொடர்ந்து வலியுறுத்துவதிலும் அவர் தன்னை மாற்றிக் கொள்ளவேயில்லை. காந்தியை அறிந்து கொள்ள விரும்பும் ஒருவர் எது தவிர்க்க முடியாத காந்தி என்று உணர மிலி போலாக்கின் நூலே போதுமானதாக இருக்கிறது. காந்தியின் அனைத்து செயல்பாடுகள் மற்றும் சிந்தனைகளின் விதைகளும் அவர் ஒரு மகாத்மா என்ற பிரமிப்பு இல்லாமல் ஒரு சாதாரண மனிதரின் அசாதாரண இயல்புகளாக இதில் வெளிப்படுகின்றன.

காந்திய தத்துவவியலாளரான ம்ரிணால் மிரி என்பவரை கௌரவிக்கும் விதமாக, "Grounding Morality - Freedom, Knowledge and the Plurality of Cultures," என்ற புத்தகத்தில் தத்துவத் துறையில் இருப்பவர்கள் எழுதிய பதினேழு கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. அதில், பிந்து பூரியின் "Secularism and the Devout - A Gandhian Reading" என்ற கட்டுரையை வாசித்தேன். மிலி போலாக்கின் தொடரில் கார்த்திக் மொழிபெயர்த்த சில விஷயங்கள் நினைவுக்கு வந்தன.

Wednesday, May 15, 2013

காந்தி எனும் மனிதர் - தாய்மை

(மிலி போலாக் எழுதிய புத்தகத்தின் தமிழாக்க தொடர்)

எந்த ஒரு மானுடப் பிரச்சினையையும் காந்தியுடன் தீவிரமாக விவாதித்து அதற்கு தீர்வு காண முயற்சித்திருக்கிறேன். அப்படி நாங்கள் ஏதோ ஒரு சமயத்தில் விவாதிக்காமல்  விட்டு வைத்த பிரச்சினை என்று எதுவும் இருப்பதாக எனக்கு நினைவில்லை. பெரும்பாலும் இவ்வகை விவாதங்கள் இயல்பாக, தம் போக்கில் துவங்கும். அவர் கூறியது எதுவோ ஒன்று என் எண்ணங்களுக்கோ அல்லது என் ஆழ்நம்பிக்கைகளுக்கோ சவால் விடுவதாக இருந்திருக்கும். அதன் விளைவாக ஒரு விவாதம் துவங்கியிருக்கும்.

காந்தி ஒரு நாள் துறவிகளாக இருப்பவர்களுக்கும் மெய்யான ஆசிரியர்களாக இருப்பவர்களுக்கும் பிரமச்சரியம் எவ்வளவு முக்கியம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்போது நான், "நீங்கள் சொல்வதை ஏற்று கொள்கிறேன்," என்றேன். "ஆனால் அப்படிப்பட்ட ஒரு ஜீவாதார அனுபவத்திலிருந்து துண்டிக்கப்பட்ட ஒருவர், ஆணோ பெண்ணோ,  அது பற்றி பிறருக்கு அறிவுரை வழங்குவது கடினமாக இருக்குமென்று  நினைக்கிறேன்".

"பிரமச்சரியத்தைக் கடைபிடிப்பவர் பூரணத்தை நோக்கி தன் முழு கவனத்தைச் செலுத்த இயலும்".

"ஆனால் பூரணத்தை நோக்கி கவனம் செலுத்துவது சாமானிய மனித சிரமங்களைப் புரிந்து கொள்ள உதவாது, தன் அன்பிற்குரிய, தன் பொறுப்பில் உள்ள ஒருவர் பசியால் வாடும் துயரத்தை காணும் கொடுமையை அறியாத துறவியோ ஆசிரியரோ, அப்படிப்பட்ட ஒரு துயரத்தில் இருக்கும் மனிதன் ஒருவனைத் திருட தூண்டும் மனநிலையை எப்போதும் புரிந்து கொள்ளவே முடியாது"

Tuesday, May 14, 2013

காந்தி எனும் மனிதர் - "நன்றி கடவுளே! நாளை நான் சிறையிலிருப்பேன்"

(மிலி போலாக் எழுதிய புத்தகத்தின் தமிழாக்க தொடர் )

நாங்கள் இந்தச் சிறு பங்களாவில் இருந்த சமயத்தில்தான் காந்தியைத் தன் சக நாட்டவர் ஒருவர் கொலை செய்ய முயற்சித்தார். அவரை அப்போது காப்பாற்றிய சில ஐரோப்பிய நண்பர்களின் வீட்டில் உடல் நலமின்றி சில காலம் தங்கியிருந்தார் காந்தி. அவர் வீட்டில் இல்லாத நிலையில் நாங்களும் புறநகரில் இருந்த எங்கள் இல்லத்தை விட்டு நகரத்தில் ஒரு சிறு வீட்டுக்குக் குடி பெயர்ந்தோம். காந்தி சற்று குணமானதும் இங்கு வந்தார். ஆனால், அப்போதும் அவர் மிகுந்த சோர்வாகவே இருந்தார்.

காந்தி குணமடையத் தொடங்கியிருந்த நாட்களில் தனக்குள் ஒரு ஆற்றலை வளர்த்துக் கொண்டார். அதை பின்னாட்களிலும் தொடர்ந்தார். வேலை செய்கையில் தான் அமர்ந்திருந்த நிலையிலேயே சற்று நேரம் உறங்கிப் பின் கண் விழித்து, புத்துணர்ச்சியுடன் தன் சிந்தனையை இடையறாது தொடர அவரால் இயன்றது. குறிப்புகளைப் பெற அவரது அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்திருந்த தனது காரியதரிசிக்கு அவர் குறிப்புகளைச் சொல்லிக்கொண்டு இருக்கும்போது நானும் அந்த அறையில் இருந்திருக்கிறேன். அப்போது திடீரென காந்தியின் சொற்கள் நின்று விழிகள் மூடிக் கொள்ளும். நாங்கள் இருவரும் அமைதியாக அமர்ந்திருப்போம். மீண்டும் திடீரென காந்தியின் கண்கள் திறந்து, அவர் தான் விட்ட இடத்திலிருந்து குறிப்புகளைத் தொடரத் துவங்குவார்.  "நான் இப்போது எங்கிருக்கிறேன்?" என்றோ "நான் என்ன சொல்லி கொண்டிருந்தேன்" என்றோ அவர் ஒருமுறைகூட கேட்டதாக நினைவில்லை.

Monday, May 13, 2013

காந்தி எனும் மனிதர் - குழந்தை வளர்ப்பு.



மிலி போலாக் எழுதிய புத்தகத்தின் தமிழாக்க தொடர் 

தென்னாப்ரிக்காவின் இந்தியர்களின் போராட்டம் நடந்து கொண்டிருக்கும்போது ஏற்பட்ட ஒரு அமைதியான காலகட்டத்தில் எனக்கு முதல் குழந்தை  பிறந்தது.  அது திரு காந்திக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. குழந்தை ஒரு புதிய உறவின் மையமாக மாறிவிட்டது, அதன் ஒவ்வொரு செயலையும் மிகுந்த ஆர்வத்துடன் அவர் கவனித்தார். பிறக்கும்போது அதன் எடை,  அதன் உணவு மற்றும்  வளர்ச்சி,  அதன் அறிவு வெளிப்படும் முதல் குறிகள், தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதில் அதற்கிருந்த பிடிவாதம் - உடல் மற்றும் மன வளர்ச்சியில் தோற்றமளித்த ஒவ்வொரு தனித்தன்மையான வெளிப்பாடும் மிகுந்த மகிழ்ச்சி தருவனவாக இருந்தன. எனக்கும் என் கணவருக்கும் மட்டுமல்ல, திரு காந்திக்கும் இது மகிழ்ச்சியளித்தது.

Saturday, May 11, 2013

அந்நிய நாட்டுப் பொருட்கள் என்றால் அவை யாவை?


                 ==============================
(12 மே 1929ல் மகாத்மாஜி எழுதியதன் தமிழாக்கம்;மூலம் குஜராத்தியில்; இங்கே தமிழாக்கம் ஆங்கிலத்தில் இருந்து.)
                         --------------------------------------------------
"ஒரு பண்பாளரான மனிதர் கேட்கிறார்:"அந்நியப்பொருட்கள் அனைத்தையும் நாம் புறக்கணிக்க வேண்டுமா? அல்லது ஒரு சிலவற்றை மட்டுமா?"

இக்கேள்வி பலமுறை கேட்கப்பட்டுவிட்டது;நானும் பலமுறை பதிலளித்துள்ளேன்.இக்கேள்வி வருவது ஒரே ஒரு நபரிடமிருந்து மட்டுமல்ல. என் சுற்றுப் பயணங்களின் போது பல இடங்களிலும் இதே கேள்வியை எதிர் கொள்கிறேன்.

என் பார்வையில்,முற்றிலுமாக‌ அந்நியத் துணி புறக்கணிப்பே எல்லாவிதமான‌ இடர்களுக்கும் இடையிலும் செய்யப்பட வேண்டியது; அதனை கதரை மட்டுமே வைத்துச் செய்ய வேண்டும்.

Tuesday, April 30, 2013

மருத்துவத்திற்கு மருத்துவம் – டாக்டர்.பி.எம்.ஹெக்டே – தமிழில். டாக்டர்.ஜீவானந்தம்


ஆம்னிபஸ் தளத்தில் வெளிவந்திருந்த கட்டுரை  


இன்றைக்கு இந்திய மருத்துவம் பயின்றவர்களுக்கு உள்ள மிகப்பெரிய சிக்கல் என்பது அவர்களுக்கு இந்திய மருத்துவத்தின் மீதும் பூரண நம்பிக்கை இல்லை, நவீன மருத்துவத்தின் மீதும் பூரண நம்பிக்கை இல்லை என்பதே. நவீன மருத்துவத்தின் எல்லையும் இந்திய மருத்துவத்தின் எல்லையும் வேறானவை. நவீன மருத்துவம் கைகழுவிய நோயாளிகளே பெரும்பாலும் இந்திய மருத்துவ முறைகளை நாடி வருகிறார்கள். நம்பிக்கை நீர்த்து தீராத பிணியிலிருந்து மீண்டெழ முடியும் என தங்கள் இறுதி நம்பிக்கையாக இந்திய மருத்துவத்தை நாடி வரும் ஒவ்வொரு நோயாளியை பார்க்கும் போதும் என் மனம் கலக்கமடையும். உண்மை நிலையை சொல்வது அவர்களின் நம்பிக்கையை அழிப்பதாகும், போலி வாக்குறுதிகளையும் அள்ளி வீசிவிட முடியாது. பெரும் மனப்போராட்டம் தான். நான் உண்மை நிலையை விளக்குவதையே எனது வழிமுறையாக கொண்டிருந்தேன், அண்மைய காலம் வரை. 
                                                      

                                                          டாக்டர் பி.எம் ஹெக்டே